/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் துாய்மை பணியாளர் பற்றாக்குறை
/
ஊராட்சிகளில் துாய்மை பணியாளர் பற்றாக்குறை
ADDED : செப் 27, 2024 04:43 AM
திருவாடானை: கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த கூடுதலாக துாய்மை பணியாளர்கள் நியமித்து தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள துாய்மை இந்தியா திட்டம் செயல்படுகிறது. கிராமங்களில் குடியிருப்புகள் பல மடங்கு அதிகரித்தும், அதற்கேற்ப துாய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால் வீடுதோறும் சென்று மக்கும், மக்காத குப்பையை, பிரித்து சேகரிப்பதில் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது. சில குடியிருப்புகளுக்கு வாரத்தில் ஒரு முறை மட்டுமே பணியாளர்கள் செல்ல வேண்டிய நிலை உருவாகிறது. எனவே மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகள் அடிப்படையில் கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
காலியிடங்களில் கிடக்கும் உடைந்த மது பாட்டில்கள், கண்ணாடித்துகள்களை சேகரிக்கும் போது பணியாளர்கள் காயமடைகின்றனர். சாக்கடை துார்வாரும் போது கையுறை உள்ளிட்ட எவ்வித உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையில் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதனால் பணியாளர்கள் காயமடைவதுடன், நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. கிராம பொது சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துாய்மைப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்களை முறையாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.