/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடிகை கவுதமியிடம் நில மோசடி வழக்கு மதுரை மேலாளர் வீட்டில் சோதனை
/
நடிகை கவுதமியிடம் நில மோசடி வழக்கு மதுரை மேலாளர் வீட்டில் சோதனை
நடிகை கவுதமியிடம் நில மோசடி வழக்கு மதுரை மேலாளர் வீட்டில் சோதனை
நடிகை கவுதமியிடம் நில மோசடி வழக்கு மதுரை மேலாளர் வீட்டில் சோதனை
ADDED : அக் 16, 2024 02:12 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம்மாவட்டம் முதுகுளத்துார் சுவாத்தான் பகுதியில் நிலம் வாங்கித் தருவதாக நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான சினிமா பைனான்சியர் அழகப்பனின் மேலாளர் ரமேஷ் சங்கரின் மதுரை கருப்பாயூரணி வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.
முதுகுளத்துார் சுவாத்தான் கிராமத்தில் 150 ஏக்கர் நிலம் வாங்கித் தருவதாக நடிகை கவுதமியிடம் காரைக்குடி சினிமா பைனான்சியர் அழகப்பன் ரூ.3.16 கோடி பெற்றார். செபி நிறுவனம் விற்பனைக்கு தடை செய்த பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிட்., நிறுவனத்தின் 64 ஏக்கர் நிலத்தை கவுதமிக்கு எழுதிக்கொடுத்து மோசடியில் ஈடுபட்டனர்.
கவுதமி புகாரில் அழகப்பன், நில புரோக்கர் நெல்லியான், பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிட்., நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஜோசப் ஜெயராஜ், பாக்கிய சாந்தி, ஜெயபாலன், அழகப்பன் மேலாளர் ரமேஷ் சங்கர், கே.எம்.பாஸ்கர், விசாலாட்சி, சந்தான பீட்டர், அழகப்பன் மனைவி நாச்சியாள், மகன்கள் சொக்கலிங்கம் அழகப்பன், சிவ அழகப்பன், மகள் ஆர்த்தி உள்ளிட்டோர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அழகப்பன் வேறு ஒரு வழக்கில் கைதாகி வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த மோசடி வழக்கில் அழகப்பன் மேலாளர் ரமேஷ் சங்கரை ,சென்னை எழும்பூரில் அக்.3ல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
அவரிடம் 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் பிரபாகரன் அனுமதியளித்தார். இதையடுத்து ரமேஷ் சங்கரை , மதுரை கருப்பாயூரணி கங்கைபுரம் 2-வது தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற போலீசார் வழக்கு தொடர்பாக அங்கு சோதனை நடத்தினர்.