/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முகமூடி அணிந்த கொள்ளை கும்பல்
/
முகமூடி அணிந்த கொள்ளை கும்பல்
ADDED : பிப் 17, 2026 05:55 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் முகமூடி அணிந்த கும்பல் ஆயுதங்களுடன் இரவில் சுற்றியது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. கொள்ளை கும்பலா என அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் வள்ளுவர் தெரு கல்பனா, தெய்வமகள் தெரு முருகேசன் வெளியூரில் வசிக்கின்றனர். இங்குள்ள வீட்டிற்கு அவ்வப்போது மட்டுமே வந்து சென்றுள்ளனர்.
இவர்களது வீடுகள் பெரும்பாலான நாட்களில் பூட்டியே இருக்கும். வீடுகள் பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்றுமுன்தினம் (பிப்.,15) இரவில், அந்த வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வீடுகளில் நகையோ பணமோ இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய மர்ம நபர்கள் அப்பகுதியில் மேலும் 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, 6க்கும் மேற்பட்ட நபர்கள் முகத்தை மறைத்தவாறு ஆயுதங்களுடன் தெருக்களில் சுற்றி வந்து வீடுகளின் பூட்டுகளை உடைத்தது தெரிய வந்தது.
கடந்த இருமாதங்களுக்கு முன்பு, ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் அர்ச்சுனன் வீட்டில் 160 பவுன் நகைகள், ரூ.18 லட்சம் பணம் கொள்ளை சம்பவத்தில் இதுவரை எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்காத நிலையில், ஜனவரியில் டூ வீலர் ஷோரூம் அருகே நிறுத்தப்பட்டிருந்த டூ வீலர் திருட்டு, தற்போது வீடுகளில் கொள்ளை முயற்சி என தொடர்ந்து நடைபெற்றுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது வெளிமாநில கொள்ளையர்களா என போலீசார் விசாரிக்கின்றனர்.

