UPDATED : ஜூன் 29, 2026 07:55 PM
ADDED : ஜூன் 29, 2026 07:52 PM

தீவிர மருத்துவ அவசரநிலை ஏற்பட்ட பிறகு வரும் முதல் ஒரு மணி நேரத்தை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் ஜி.அழகேஸ்வர் குப்தா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாரடைப்பு, பக்கவாதம், சாலை விபத்து, விஷம் அருந்துதல் அல்லது திடீர் இதயநிறுத்தம் போன்ற சூழ்நிலைகளில் முதல் சில நிமிடங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகளே ஒருவர் உயிர் பிழைப்பாரா, முழுமையாக குணமடைவாரா அல்லது நிரந்தர ஊனமடைவாரா என்பதை தீர்மானிக்கின்றன.சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தாமதம் காரணமாக மீள முடியாத பாதிப்புகளையும் கண்டுள்ளேன். இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு அவசியம் தேவை. ‛பொன்னான ஒரு மணி நேரம்' என்பது ஒரு தீவிர மருத்துவ அவசரநிலை ஏற்பட்ட பிறகு வரும் முதல் ஒரு மணி நேரம்.
இந்த நேரத்தில் நோயை அடையாளம் காண்பது, முதலுதவி அளிப்பது மற்றும் துரிதமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வது உயிரைக் காப்பாற்றும் முக்கியமாகும். மாரடைப்பை சிலர் வாயுத்தொல்லை என காலம் தாழ்த்துவர். ஒவ்வொரு நிமிட தாமதமும் இதயத் தசையின் சேதத்தை அதிகரிக்கும். சாலை விபத்துகளின் போது முதலில் அவசர உதவியை அழைக்க வேண்டும். ரத்தப்போக்கு உள்ள பகுதியை அழுத்தி தேவையற்ற அசைவுகளைத் தவிர்க்க வேண்டும். உடல்நலக் குறைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
தாமதமின்றி மருத்துவ உதவியை நாட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முதலுதவி உயிர்காக்கும் திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். -டாக்டர் ஜி.அழகேஸ்வர் குப்தா, ராமநாதபுரம், 94899 39963.
