ADDED : செப் 06, 2026 04:52 PM
கீழக்கரை:
கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தில் பாமா ருக்மணி சமேத கண்ணன் கோயிலில் 21 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா நடந்தது. சிவகங்கை, காரைக்குடி, திருமயம், மணியங்குடி, சத்தியமங்கலம், சிராவயல், அரிட்டாபட்டி ஆகிய இடங்களில் இருந்து 8 அணிகள் பங்கேற்றன. இவற்றில் பிடிபட்ட மாடுபிடி வீரர்களுக்கு பல்வேறு வகையான பரிசு பொருள்களும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு வடமாடு எருதுகட்டு பேரவை தலைவர் ஆதித்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* முதுகுளத்துார் : விளங்குளத்துார் கிராமத்தில் 37ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில், மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 13 காளைகள்,150 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற காளைகள்,வீரர்களுக்கு குத்துவிளக்கு,சேர்,ரொக்க பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. ஒருசில மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர்.
