/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பட்டாவிற்கு அலைக்கழிக்கும் அதிகாரிகள்
/
பட்டாவிற்கு அலைக்கழிக்கும் அதிகாரிகள்
ADDED : மார் 18, 2025 10:41 PM
திருப்புல்லாணி: கீழக்கரை தாலுகா குதக்கோட்டை ஊராட்சியில் உள்ள கிராமத்தில் வீட்டுமனை ஒப்படைப்பு செய்வதற்கு பட்டா வழங்கப்பட்டது. 2024 மார்ச் 15ல் அப்போதைய கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார் மற்றும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் மூலம் வீட்டுமனைக்கான பட்டா வழங்கப்பட்டது.
குதக்கோட்டை ஊராட்சியில் 65 பேருக்கு தலா இரண்டரை சென்ட் நிலம் வழங்கிய கீழக்கரை தாலுகா அலுவலகத்தினர் இடம் குறித்த கணினி பதிவேற்றம் இதுவரை செய்யாமலும், கிராம கணக்குகளில் இந்நிலம் குறித்து எவ்வித வரவும் வைக்காமலும் உள்ளனர்.
இதனால் தங்களுடைய நிலம் எந்த இடத்தில் இருக்கிறது என தெரியாமல் தொடர்ந்து கீழக்கரை தாலுகா அலுவலகத்திற்கு அலைந்து வருகின்றனர். குதக்கோட்டையைச் சேர்ந்த ஜாபர் சுல்தான் 65, கூறியதாவது:
கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் 65 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. இந்நிலையில் அரசு ஒப்படைப்பு செய்த நிலத்தை பார்ப்பதற்கும் அவற்றை பயன்படுத்துவதற்கும் இதுவரை எவ்வித வழியும் இல்லாத நிலை தொடர்கிறது.
ஒவ்வொருவருக்கும் தலா இரண்டரை சென்ட் அரசு நிலம் வழங்கியுள்ள நிலையில் அதற்குரிய பட்டாவும் அனைவரிடமும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் சர்வே துறையில் சென்று எங்களுக்கான இடத்தை அளந்து தாருங்கள் என கேட்டதற்கு, நீங்கள் அப்போதைய தாலுகா நிர்வாகத்திடம் கேட்டு பெற்றிருக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து அலைக்கழிக்கின்றனர்.
எனவே அரசு வழங்கிய நிலத்திற்கு பட்டா இருந்தும் அது எங்கே இருக்கிறது என்ற விவரம் கூட தெரியாத நிலை உள்ளது. அரசு வழங்கிய ஆணை மற்றும் நிபந்தனைகள் எல்லாம் கைவசம் உள்ள நிலையில் அந்நிலத்தை பயன்பாட்டிற்கு உரிய வகையில் மாற்றாமல் அதிகாரிகள் தொடர் மெத்தனம் காட்டுவது வேதனையாக உள்ளது.
கலெக்டருக்கும், முதல்வருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளேன். எனவே நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண கீழக்கரை தாலுகா அலுவலகத்தினர் முன் வர வேண்டும் என வேதனை தெரிவித்தார்.