இணைய வழி சம்பள பட்டியல் சிக்கல்... அலைக்கழிப்பு: பிரச்னைகளுக்கு பதில் தராததாக புகார்
இணைய வழி சம்பள பட்டியல் சிக்கல்... அலைக்கழிப்பு: பிரச்னைகளுக்கு பதில் தராததாக புகார்
ADDED : ஜூன் 17, 2026 04:42 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல், இதர அரியர் பில்கள், ஓய்வூதியப் பலன்களை இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதில் கடந்த சில மாதங்களாகப் தொழில்நுட்ப பிரச்னையால் தேக்க நிலை உள்ளது. இதுகுறித்து கேட்கும் போது பொறுப்பான பதிலை அளிக்காமல் விப்ரோ நிறுவன பணியாளர்கள் அலைகழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல், இதர அரியர் பில்கள் மற்றும் ஓய்வூதியப் பலன்களை IFHRMS (Integrated Financial and Human Resources Management System) இணையதளம் மூலம் சமர்ப்பிப்பதில் கடந்த சில மாதங்களாக தொழில் நுட்ப பிரச்னையால் தேக்க நிலை ஏற்படுகிறது. பதிவேற்றம் செய்யும் போது பல்வேறு பிழைகள் ஏற்படுகின்றன.
இதற்காகத் தரவு மையத்திற்குத் தொழில்நுட்பக் குறைபாடு குறித்த 'டிக்கெட் ஐடி' பதிவு செய்தும், அவை வாரக் கணக்கில் தீர்க்கப்படாமல் உள்ளதால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம், செயலாளர் அப்துல் நஜ்முதின் ஆகியோர் கூறியதாவது:
மாவட்டக் கருவூல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் விப்ரோ நிறுவனத் தொழில் நுட்பப் பணியாளர்கள் பில் தேக்கங்கள் குறித்துக் கேட்கும் போது, அவர்கள் பொறுப்பான பதிலை அளிக்காமல் அழைக்கழிக்கின்றனர். ஓய்வு பெற்ற முதியோர்களின் ஓய்வூதியக் கோப்புகள் மாதக் கணக்கில் தேக்கமடைந்து, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிதி நிர்வாகமும், ஊழியர்களின் வாழ்வாதாரமும் ஒரு தனியார் நிறுவனத்தின் தற்காலிகப் பணியாளர்கள் கையில் உள்ளது தான். இவற்றுக்கு நிரந்தரத் தீர்வாக மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அனைத்து 'டிக்கெட்'களையும் உடன் தீர்வு காண விப்ரோ, கருவூலத் துறைக்கு கலெக்டர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட வேண்டும் என்றனர்.
இதுகுறித்து கருவூலத்துறை அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்ட துறையின் பொறுப்பாளர்கள் இணையத்தளத்தில் பில்களைப் பதிவேற்றம் செய்யும் போது பல்வேறு பிழைகள் ஏற்படுகின்றன. இப்பிரச்னை அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. ராமநாதபுரத்தை பொறுத்தமட்டில் நேரடியாக சென்னையில் உள்ள விப்ரோ நிறுவனத்தை தொடர்பு கொண்டு சரி செய்கிறோம். குறிப்பாக சம்பளம், ஓய்வூதியம் வர தாமதம் ஆனால் அவர்களை அழைத்து நாங்களே சரி செய்து தருகிறோம் என்றனர்.---
