/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் கைதி இறந்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
/
பரமக்குடியில் கைதி இறந்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
பரமக்குடியில் கைதி இறந்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
பரமக்குடியில் கைதி இறந்த வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
ADDED : மார் 02, 2024 11:41 PM
ராமநாதபுரம்: பரமக்குடி போலீஸ் ஸ்டேஷனில் கைதி மர்மமான முறையில் இறந்த வழக்கு விசாரணையில் 3 ஏட்டுகள் ஆஜரான நிலையில் விசாரணையை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு மார்ச் 22 க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன் 26, திருட்டு வழக்கு தொடர்பாக 2012-ல் அக்.2-ம் தேதி பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துவரப்பட்ட இவர் போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் அப்போதைய எஸ்.ஐ., முனியசாமி உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. கைதான முனியசாமி ஜாமீனில் வெளிவந்த நிலையில் இறந்தார்.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஏட்டுகள் பரமக்குடி ஞானசேகரன், மஞ்சூர் கிருஷ்ணவேல் மற்றும் ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண் 2ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதித்துறை நடுவர் கோர்ட்டில் இருந்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நேற்று வழக்கு விசாரணைக்கு 3 ஏட்டுகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மார்ச் 22-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.

