பயணிகள் அவதி: அடிப்படைவசதி இல்லாத கடலாடி பஸ் ஸ்டாண்ட்: உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வலியுறுத்தல்
பயணிகள் அவதி: அடிப்படைவசதி இல்லாத கடலாடி பஸ் ஸ்டாண்ட்: உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வலியுறுத்தல்
ADDED : மே 04, 2026 12:21 AM

கடலாடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி ஒன்றியத்தில் தான் 60 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியினர், வெளியூர் பலஆயிரம் மக்கள் பயன்படுத்தும் பஸ் ஸ்டாண்ட் போதிய அடிப்படை வசதிகள் இன்றி உள்ளது. பெயரளவில் இரும்பு கூரை ஷெட்டில் இயங்கி வருகிறது, உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
கடந்த 1969ல் கட்டப்பட்ட கடலாடி பஸ் ஸ்டாண்ட் சிதிலமடைந்து விபத்து அபாயத்துடன் இருந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் தேவை என பொதுமக்களின் கோரிக்கை குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன்காரணமாக கடந்த 2022ல் கடலாடி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் செலவில் இரும்பு கூரையிலான ஷெட் அமைக்கப்பட்டு அவற்றில் பத்து இருக்கை, மற்றும் மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் பயணிகள் வருகைக்கு ஏற்ப போதிய இடவசதி இன்றி அருகில் உள்ள கடையிலும் ரோட்டோரங்களிலும் நிற்கும் அவலநிலை தொடர்கிறது. எனவே கடலாடி பஸ் ஸ்டாண்ட் முழுவதுமாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.
இதனருகே சேதமடைந்த நிலையில் இருந்த பழைய அரசு மருத்துவமனை கட்டடங்கள் கடந்த இருஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக இடித்து அகற்றப்பட்டது.
தற்போது காலியாக உள்ள இடத்தில் காலியாக உள்ள இடத்தில் குப்பை, கழிவு நீரை அவ்விடத்தில் கொட்டுகின்றனர். அவ்விடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான கட்டுமான வசதியை மேற்கொள்ள வேண்டும். அடிப்படை கட்டமைப்புகளுடன் கூடிய புதிய பஸ் ஸ்டாண்ட் தேவை என்பது குறித்து கலெக்டரிடம் மக்கள் தொடர்ந்து மனு அளித்துள்ளனர்.
இதுவரை மூன்று கலெக்டர்கள் இடத்தை ஆய்வு செய்து விட்டு சென்றுள்ளனர் திட்ட மதிப்பீடு அனைத்தும் தயார் நிலையில் இருந்தும் பணிகள் நடக்காமல் உள்ளது. மாலை 6:30 மணிக்கு மேல் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வராமல் தேவர் சிலை அருகே உள்ள சுற்றுச்சாலையின் வழியாக செல்கிறது. மெயின் பஜார் வரை புதிய தார்சாலை அமைக்க வேண்டும். பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை, குடிநீர், இருக்கை வசதி ஆகிய உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
