/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகை: கோயிலில் தரிசனம் செய்கிறார்
/
பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகை: கோயிலில் தரிசனம் செய்கிறார்
பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகை: கோயிலில் தரிசனம் செய்கிறார்
பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரம் வருகை: கோயிலில் தரிசனம் செய்கிறார்
ADDED : ஜன 20, 2024 01:29 AM

ராமேஸ்வரம்:-ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.20, 21ல் இரண்டு நாள் ஆன்மிக பயணம் செய்யும் பிரதமர் மோடி இன்று (ஜன.20) ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வருகிறார். அங்கு தீர்த்தங்களில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கிறார். இதையடுத்து நேற்று ஹெலிகாப்டர், கார் சோதனை ஓட்டம் நடந்தது.
திருச்சி ஸ்ரீரெங்கம் கோயிலில் தரிசனம் முடித்து இன்று மதியம் 2:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் அமிர்தானந்தமயி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் வந்திறங்குகிறார். அங்கிருந்து காரில் வந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோயிலுக்குள் செல்கிறார். இங்குள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடுகிறார்.
அதன் பின் கோயில் வளாகத்தில் நடக்கும் ராமரின் கீர்த்தனை மற்றும் ராமாயண சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்று சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்கிறார். அடுத்த நாள் தனுஷ்கோடி கடற்கரையில் சிறப்பு பூஜை செய்கிறார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு ராமேஸ்வரம்- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, கோயில் ரதவீதிகளில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடற்படை, கடலோர காவல் படை கப்பல்கள் ரோந்து சுற்றுகின்றன.
பாதுகாப்பு ஒத்திகை
இந்நிலையில் நேற்று மதியம் 12:00 மணிக்கு ராமேஸ்வரம் அமிர்தானந்தா பள்ளி வளாகம், ராமேஸ்வரம் அருகே மண்டப முகாமில் இரு ஹெலிகாப்டர்கள் வந்திறங்கி சோதனை ஓட்டம் நடந்தது.
மதியம் 2:30 மணிக்கு பிரதமர் பயணிக்கும் கார், பாதுகாப்பு அதிகாரிகள் கார்களில் ராமேஸ்வரம் கோயில் மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை சோதனை ஓட்டம் நடந்தது.