/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாதுகாப்பின்றி பஸ் ஸ்டாண்டில் இறக்கப்படும் தபால் பைகள்
/
பாதுகாப்பின்றி பஸ் ஸ்டாண்டில் இறக்கப்படும் தபால் பைகள்
பாதுகாப்பின்றி பஸ் ஸ்டாண்டில் இறக்கப்படும் தபால் பைகள்
பாதுகாப்பின்றி பஸ் ஸ்டாண்டில் இறக்கப்படும் தபால் பைகள்
ADDED : பிப் 15, 2025 05:49 AM

பரமக்குடி : பரமக்குடி பஸ்ஸ்டாண்டில் மதுரையில் இருந்து எடுத்து வரப்படும் தபால் பைகள் பாதுகாப்பற்ற முறையில் இறக்கப்படும் சூழலில் மீண்டும் பரமக்குடியில் அஞ்சல் பிரிப்பகம் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்கிறது.
பரமக்குடியில் 1984ம் ஆண்டு முதல் ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் செயல்பட்டு வந்தது. இதன்படி பரமக்குடி, ராமநாதபுரம் கோட்டத்தில் 59 துணை அஞ்சலகங்களுக்கு உட்பட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாதாரண தபால்கள், 3000த்திற்கும் மேற்பட்ட ரிஜிஸ்டர் தபால்கள் கையாளப்பட்டது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டம் உட்பட 100 கி.மீ., சுற்றளவில் உடனுக்குடன் தபால்கள் கிடைத்து வந்தன. இந்நிலையில் 2010, 2022ம் ஆண்டுகளில் தபால் நிலையம் மூடும் உத்தரவு தள்ளி வைக்கப்பட்டது.
ஆனால் 2024 அக்.17ல் அஞ்சல் துறை இயக்குனரகம் மதுரைக்கு அஞ்சல் பிரிப்பகத்தை மாற்றும் உத்தரவை வெளியிட்டது. தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்த நிலையில், சிரமங்கள் குறித்து தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டியது.
ஆனால் டிச., மாதத்தில் மதுரைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம், பரமக்குடி தபால்கள் ரயிலில் மதுரைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அன்றைய தபால்கள் அனைத்தும் மதுரை அலுவலகத்தில் பிரிக்கப்பட்டு மறுநாள் காலை 6:30 மணிக்கு அஞ்சல் துறை வேனில் பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் வந்தடைகிறது.
தொடர்ந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்கிறது. இங்கு அலுவலகம் இல்லாத சூழலில் பஸ் ஸ்டாண்டிலேயே ஒட்டுமொத்தமாக இறக்கி வைக்கின்றனர்.
இதனால் தபால்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதுடன், உடனுக்குடன் தபால்கள் கிடைக்காததால் பலரும் துறையை மறக்கும் சூழல் உள்ளது.
தொடர்ந்து கூரியர் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஆகவே மீண்டும் பரமக்குடியில் ரயில்வே அஞ்சலகம் செயல்பட துறை அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

