ADDED : ஜூன் 24, 2026 11:40 PM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை நிறைவு விழாவான நேற்று கோயில் குருக்கள் அனுமன் வேடமிட்டு வலம் வந்தார்.
ராமநாதசுவாமி கோயில் ராமலிங்க பிரதிஷ்டை விழா ஜூன் 22ல் துவங்கியது. ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக கைலாய மலையில் இருந்து சிவலிங்கம் எடுத்துவருமாறு அனுமனிடம் சீதை கூறினார்.
அனுமன் வர தாமதமானதால் கடற்கரை மணலில் சிவலிங்கம் செய்து சீதை பூஜை செய்தார். இதனால் அனுமன் கோபம் கொண்டு தனது வாலால் சீதை உருவாக்கிய சிவலிங்கத்தை இழுத்தார். அப்போது வால் அறுந்தது.
இந்நிகழ்வை நினைவு கூறும் விதமாக நிறைவு விழாவில் கோயில் குருக்கள் அனுமன் வேடமிட்டு கையில் கதையுடன் சுவாமி சன்னதியில் வலம் வந்தார். இதன் பின் சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோயில் இணை ஆணையர் செல்லதுரை, பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
