எதிர்பார்த்த ஊதிய உயர்வு இல்லை ரேஷன் பணியாளர்கள் அதிருப்தி
எதிர்பார்த்த ஊதிய உயர்வு இல்லை ரேஷன் பணியாளர்கள் அதிருப்தி
ADDED : மார் 07, 2026 02:16 AM
ராமநாதபுரம்: ரேஷன் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், கட்டுனர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. கண் துடைப்புக்காக அரசு ஊதிய உயர்வு அறிவித்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழக கூட்டுவுறத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் நலனை கருத்தில் கொண்டு பொதுவினியோக திட்டத்திற்கு தனித்துறையை ஏற்படுத்த வேண்டும். பொட்டல முறையில் உணவுப்பொருட்களை கடைகளுக்கு வழங்க வேண்டும். தேவையான எடையாளர்களை நியமிக்க வேண்டும்.
கல்வி தகுதிக்கேற்ப விற்பனையாளர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியமும், எடையாளருக்கு அலுவலக உதவியாளர் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தொடர்ந்து ரேஷன் கடை பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
இதன் காரணமாக மார்ச் 2ல் நடந்த கூட்டத்தில் ஊதிய மாற்ற குழுவின் பரிந்துரைப்படி ஊதிய உயர்வு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தற்போது தேர்தலை மனதில் கொண்டு அவசரமாக பெயரளவில் ஊதிய உயர்வு அரசு அறிவித்துள்ளதாக ரேஷன் பணியாளர்கள் புலம்புகின்றனர்.
ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூறியதாவது: அடிப்படை சம்பளம் ரூ. 8600 மட்டுமே தருகின்றனர். இது போதாது. இளநிலை உதவியாளர்களுக்கு இணையாக ரூ.19,500 அடிப்படை சம்பளம் வழங்க வேண்டும் என அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது கண் துடைப்பிற்காக 15 சதவீதம் அதாவது ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான் தொகுப்பூதியம் ரூ.6250ல் இருந்து ரூ.7500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5500ல் இருந்து ரூ.6600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய மாற்றக்குழு பரிந்துரைப்படி விற்பனையாளர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியமும், எடையாளருக்கு அலுவலக உதவியாளர் ஊதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்றனர்.
