ADDED : மார் 28, 2025 05:37 AM
சாயல்குடி : சாயல்குடி, கடலாடி, சிக்கல், திருப்புல்லாணி, ரெகுநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சீர் மரபினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதிகள் பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளதால் பராமரிப்பு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 முதல் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி அருகிலேயே விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் விடுதிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. தற்போது பள்ளி தேர்வுகள் நடந்து வரும் நிலையில் விடுமுறைக்கு பிறகு விடுதிகளில் மாணவர்கள் யாரும் விடுதியை பயன்படுத்த மாட்டார்கள்.
அப்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் சேதமடைந்த அரசு மாணவர்கள் மற்றும் மாணவியர் விடுதியை ஆய்வு செய்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து அவர்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். உத்தரகோசமங்கை, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அரசு விடுதிகள் இடித்து அகற்றப்பட்டுள்ளதால் தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
எனவே ஏற்கனவே இருந்த இடத்தில் உரிய முறையில் தரமான விடுதிகளை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.