ADDED : ஏப் 26, 2026 04:30 PM
திருவாடானை:சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் கட்டுபாடுகள் தளர்ந்ததால் வியாபாரிகள் நிம்மதியடைந்தனர்.சட்டசபை தேர்தல் அறிவிக்கபட்ட நாள் முதல் திருவாடானை உட்பட மாவட்டத்தில் நான்கு தொகுதி முழுவதும் ஆங்காங்கே பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சோதனையில் தொண்டி கடலோர மீன்வியாபாரிகள் மற்றம் வர்த்தகர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாயினர். ஏலத்திற்காக பெரிய தொகையை எடுத்து செல்ல வேண்டிய சூழலில் பறக்கும்படையினரின் சோதனையால் பணம் கொண்டு செல்லமுடியாமல் தவித்தனர். அதே போல் ஜவுளி, மளிகை மற்றும் கட்டுமான பொருள் விற்பனை செய்யும் சிறு வர்த்தகர்களும் பணம் பரிமாற்றம் செய்யமுடியாமல் பாதிக்கபட்டனர். தற்போது ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் தேர்தல் கெடுபிடிகள் தளர்த்தபட்டன. இது குறித்து வர்த்தகர்கள் கூறியதாவது- கடந்த ஒரு மாதமாகவே தொழில் தேக்க நிலை அடைந்தது. இப்போது கட்டுபாடுகள் தளர்ந்துள்ளதால் நிம்மதியாக உள்ளது என்றனர்.
