/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகத்திற்கு ரூ.1 லட்சம்
/
பிளாஸ்டிக் பயன்படுத்தாத உணவகத்திற்கு ரூ.1 லட்சம்
ADDED : ஜூலை 22, 2025 11:50 PM
ராமநாதபுரம்; பிளாஸ்டிக்கை உணவு பரிமாறவும், பார்சல் செய்யவும் பயன்படுத்தாத உணவங்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்கம், விருது வழங்கப்படும் என ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மக்கும் தன்மையுள்ள பொருட்களை உணவு விநியோகிக்க பயன்படுத்தும் பெரிய உணவகங்களுக்கு ரூ.1 லட்சம், சாலையோர கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசும், விருதும் வழங்கப்படும்.
பெரிய கடைகளுக்கு ஆண்டு விற்பனை மற்றும் கொள்முதல் ரூ.12 லட்சத்திற்கு மேல் இருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் ஆக., இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை கலெக்டர் தலைமையிலான குழு கள ஆய்வு செய்து தமது பரிந்துரையை உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு சமர்பிப்பர்.
அதன்பின் மாநில அளவிலான பரிசீலினைக் குழு பரிசீலித்து மாவட்டத்திற்கு தலா ஒரு பெரிய உணவகத்தையும், சிறு உணவகத்தையும் சிறந்த உணவகமாக தேர்ந்தெடுக்கும்.
தகுதிகள் உணவு பாதுகாப்புத் துறை உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒருவர் உணவு பாதுகாப்பில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பணியாளர்களுக்கு தொற்று நோய் தாக்கமற்றவர்கள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சுகாதார மதிப்பீட்டுச் சான்று பெற்றிருக்க வேண்டும். அதிக ஆபத்துள்ள உணவு வகைக்கான தணிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்திய உணவு பாதுகாப்பு, தர ஆணையகரத்தால் வழங்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியல் மூலம் தாமே தணிக்கை மேற்கொண்டு சமர்பிக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், வேலுமாணிக்கம் ஹாக்கி ஸ்டேடியம் பின்புறம் உள்ள மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.