/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் இன்று அதிகாலை புதிய சந்தனக்காப்பு
/
உத்தரகோசமங்கையில் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் இன்று அதிகாலை புதிய சந்தனக்காப்பு
உத்தரகோசமங்கையில் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் இன்று அதிகாலை புதிய சந்தனக்காப்பு
உத்தரகோசமங்கையில் பச்சை மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் இன்று அதிகாலை புதிய சந்தனக்காப்பு
ADDED : ஜன 13, 2025 01:07 AM

உத்தரகோசமங்கை: - ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் பழமையும் புராதன சிறப்பும் பெற்ற மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள பச்சை மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி நேற்று காலை 7:00 முதல் 8:30 மணி வரை நடந்தது.
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு வடக்கு பகுதியில் தெற்கு முகமாக பச்சை மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இங்கு ஆண்டிற்கு ஒருமுறை ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்டது.
ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் இந்த அபூர்வ நிகழ்வை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.
அபூர்வ பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் ஒலி, ஒளியால் பாதிப்புகள் ஏற்படாதவாறு ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்படுகிறது. கடந்த ஆண்டு 70 கிலோ சந்தனம் திருமேனியில் பூசப்பட்டிருந்த நிலையில் சந்தனம் படி களையப்பட்டது.
நேற்று காலை 9:00 மணி முதல் தொடர்ச்சியாக மூலவர் மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப் பொடி, கரும்புச்சாறு, பஞ்சாமிர்தம், சந்தனப் பொடி, தேன் உள்ளிட்ட 32 வகை அபிஷேகங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
அபிஷேகம் நிறைவிற்குப் பிறகு மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனாதி தைலம் பூசப்பட்டது. இரவு 11:30 மணிக்கு மேல் திரையிடப்பட்டு புதிய சந்தனத்தால் மரகத நடராஜருக்கு சந்தன காப்பு அணிவிக்கப்பட்டது. இன்று(ஜன.,13) அதிகாலை 2:30 மணிக்கு பிறகு திரை விலக்கப்பட்டு அதிகாலை 4:00 மணி முதல் ஆருத்ரா தரிசனம் நடந்தது.
காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமான் திருவீதி உலா, மாலை 5:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், இரவு 8:00 மணிக்கு மேல் மாணிக்கவாசகர் பெருமானுக்கு காட்சி கொடுத்து சோடச உபசார அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.
நாட்டியாஞ்சலி மண்டபத்தில் நேற்று காலை முதல் பரதநாட்டியம் நடந்தது. கோயில் ராஜகோபுரத்தில் இருந்து பொது தரிசனம், ரூ.10, ரூ.100, ரூ.250 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிறப்பு தரிசனம், வி.ஐ.பி., பாதை வழியாக செல்ல வசதிகள் செய்யப்பட்டிருந்தன. கோயிலில் உள்ள கவுன்டரில் கடந்த ஆண்டு சந்தன பாக்கெட்டுகள் ரூ.100க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.250க்கு தனியாக விற்பனை செய்தனர். விலை உயர்வு குறித்து பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.