/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடுத்தமாதம் சிறை நிரப்பும் போராட்டம்தயாராகும் இடைநிலை ஆசிரியர்கள்
/
அடுத்தமாதம் சிறை நிரப்பும் போராட்டம்தயாராகும் இடைநிலை ஆசிரியர்கள்
அடுத்தமாதம் சிறை நிரப்பும் போராட்டம்தயாராகும் இடைநிலை ஆசிரியர்கள்
அடுத்தமாதம் சிறை நிரப்பும் போராட்டம்தயாராகும் இடைநிலை ஆசிரியர்கள்
ADDED : ஆக 23, 2025 08:14 PM

ராமநாதபுரம்:சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி அடுத்தமாதம்(செப்.,ல்) சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்க பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்தார்.
இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கான தென் மண்டல ஆயத்த மாநாடு, ராமநாதபுரம் மாவட்ட, வட்டார கிளைதொடக்க விழா நேற்று நடந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமை வகித்தார். பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
பொதுச்செயலாளர் ராபர்ட் கூறியதாவது:
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரே கல்வித் தகுதி, பணி கொண்டிருந்தாலும் 2009 ஜூன் 1 க்கு பின் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5200 வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஊதியக் குழுவிலும் ஊதியம் உயர்ந்தாலும் 2009 ஜூன் 1க்கு பின் பணியில் சேர்ந்த இடை நிலை ஆசிரியர்களுக்கு மட்டும் உயராது.
தி.மு.க., ஆட்சியில் 2009ல் ஏற்பட்ட இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும் என 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கடந்த ஆட்சியில் போராடும் போது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் என்றார். தற்போது வரை எந்த முடிவும் ஏற்படவில்லை.
தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க காரணம் இடைநிலை ஆசிரியர்கள். ஆனால் ஒரு டிரைவரின் ஊதியத்திற்கு இணையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஊதிய முரண்பாட்டை களைந்தால் அரியர் தொகை தர கூடுதல் செலவிட வேண்டியிருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அரியர் வேண்டாம் என கூறியும் சம ஊதியம் தர மறுக்கின்றனர்.
இதனை கண்டித்து செப்டம்பரில் (அடுத்தமாதம்) சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். ஆசிரியர்களை சிறையில் தள்ளிய அவமானம் தமிழக முதல்வருக்கு வரக்கூடாது. சம வேலைக்கு சம ஊதியம் கொடுக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். விரைவில் போராட்டம் நடக்கும் நாள், இடம் அறிவிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து புதிதாக துவங்கிய ராமநாதபுரம் மாவட்ட, வட்டார கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். மாநில துணைத் தலைவர் ஞானசேகரன், துணைச் செயலாளர் வேல்முருகன் உடன் இருந்தனர்.

