/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவாலயங்களில் சனி பிரதோஷம் வழிபாடு
/
சிவாலயங்களில் சனி பிரதோஷம் வழிபாடு
ADDED : டிச 29, 2024 04:17 AM

பரமக்குடி: பரமக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நடந்த மகா சனி பிரதோஷ விழாவில் பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ கோஷம் முழங்க வழிபாடு நடத்தினர்.
சிவனுக்கு உரிய விரதங்களில் பிரதோஷ காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் மகா சனி பிரதோஷத்தில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் சிவன் கோயிலுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதன்படி நேற்று மாலை 4:00 மணிக்கு விசாலாட்சி அம்பிகா சந்திரசேகர சுவாமி(ஈஸ்வரன்) கோயிலில் சன்னதி நந்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் வெள்ளி கவசம் சாற்றி, சந்தன காப்பு அலங்காரத்தில் வில்வம், அருகம்புல் அர்ச்சனை செய்யப்பட்டது.
சுவாமி, அம்மன் ரிஷப வாகனத்தில் கோயில் வளாகத்தில் மூன்று முறை வலம் வந்தனர். இதே போல் பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
எமனேஸ்வரம் எமன் ஈஸ்வரனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற, எமனேஸ்வரமுடையவர் கோயிலில் ஏராளமானோர் பிரதோஷ நந்தியை வழிபாடு செய்தனர். நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் பிரதோஷ நந்திக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனாய வல்மீகநாதர், தொண்டி சிதம்பரேஸ்வரர், தீர்த்தாண்டதானம் சகலதீர்த்தமுடையவர், நம்புதாளை நம்புஈஸ்வரர், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர், வட்டாணம் காசிவிஸ்வநாதர் கோயில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.
சிவசாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மஞ்சள், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தன. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு அபிேஷக, பூஜைகள் நடந்தது.
மங்களநாதர் சுவாமி சன்னதி முன்புறமுள்ள பிரதோஷ நந்தி பகவானுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பிரதோஷ பாடல்களை பாடினர், பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
இதுபோல சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் கோயில் மற்றும் கீழக்கரை தட்டான் தோப்பு தெரு, நாராயணசுவாமி கோயிலில் உள்ள லிங்கேஸ்வரர் சனி பிரதோஷ விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் நெய் தீபமேற்றி வழிபாடு செய்தனர்.