காரில் இருந்த சிங்கப்பூர் டாலர், ரிங்கிட் பறிமுதல்
காரில் இருந்த சிங்கப்பூர் டாலர், ரிங்கிட் பறிமுதல்
ADDED : மார் 19, 2026 04:34 AM
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உரிய ஆவணங்களின்றி கார், டூவீலரில் எடுத்து செல்லப்பட்ட பணம், மலேசியா ரிங்கிட், சிங்கப்பூர் டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற காரை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ.1.72 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அத்துடன் 318 சிங்கப்பூர் டாலர்கள், 74 மலேசிய ரிங்கிட்டுகளை கைப்பற்றினர்.
அவற்றை திருவாடானை சார்நிலை கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் திருவாடானை தொகுதி அச்சுதன்வயல் செக்போஸ்ட்டில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம் நோக்கி வந்த டூவீலரை நிறுத்தி ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பெட்ரோல் பங்கிலிருந்து கம்பெனிக்கு பணம் கட்ட செல்வதாக டூவீலரில் வந்தவர் கூறினார். பறிமுதலான பணம் ராமநாதபுரம் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
* பரமக்குடி மருச்சுக்கட்டி சோதனை சாவடியில் கண்காணிப்பு குழு அலுவலர் களஞ்சியம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சோமாத்துார் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி விஜயநாகராணி இருசக்கர வாகனத்தில் சென்றார். அவரிடம் ஒரு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரிந்தது. இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பரமக்குடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
