/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.பி.பட்டினம் பாம்பாற்றில் கிடப்பில் தடுப்பணை திட்டம்
/
எஸ்.பி.பட்டினம் பாம்பாற்றில் கிடப்பில் தடுப்பணை திட்டம்
எஸ்.பி.பட்டினம் பாம்பாற்றில் கிடப்பில் தடுப்பணை திட்டம்
எஸ்.பி.பட்டினம் பாம்பாற்றில் கிடப்பில் தடுப்பணை திட்டம்
ADDED : ஜன 21, 2025 05:33 AM
தொண்டி: எஸ்.பி.பட்டினம் பாம்பாற்றில் தடுப்பணை கட்டப்படும் என சட்டசபையில் அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் திட்டம் செயல்படுத்தாமல் கிடப்பில் உள்ளது.
எஸ்.பி.பட்டினம் அருகே சோழகன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவர் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பினார்.
அதில் எஸ்.பி.பட்டினம் பாம்பாற்றில் தடுப்பணை இல்லாததால் மழை நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பாம்பாற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்று கூறியிருந்தார்.
அதற்கு பரமக்குடி பொதுப்பணித்துறை நீர்வளத்துறை செயற்பொறியாளர் பதில் அனுப்பினார்.
அதில் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அருகே பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட, கடந்த 2021-22 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பாம்பாற்றில் ரூ.15 கோடியில் தடுப்பணை அமைக்க சட்டசபை மானியக் கோரிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டது.
அதன்படி மேற்கண்ட தடுப்பணைக்கான மதிப்பீடு நிர்வாக ஒப்புதல் பெற வேண்டி அரசுக்கு சமர்ப்பிக்கப் பட்டது.
நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒப்புதல் கிடைக்க பெற்றபின் பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் மூன்று ஆண்டுகள் ஆகியும் திட்டம் நிறைவேறவில்லை.
பருவமழையின் போது மழை நீர் வீணாக கடலில் கலப்பதால் தடுப்பணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.