/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோவில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் சிறப்பு வழிபாடு
/
ராமேஸ்வரம் கோவில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் சிறப்பு வழிபாடு
ராமேஸ்வரம் கோவில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் சிறப்பு வழிபாடு
ராமேஸ்வரம் கோவில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் சிறப்பு வழிபாடு
ADDED : ஜூலை 07, 2025 03:28 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், சுவாமி மற்றும் அம்மன் சன்னிதி கருவறையில் இரண்டு மணி நேரம் சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தரிசனம் செய்தார்.
காலை 10:30 மணிக்கு ராமநாத சுவாமி கோவிலுக்கு வந்த சுவாமிகளுக்கு, கோவில் குருக்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
தரிசனம்
பின், சுவாமி சன்னிதி கருவறைக்குள் சென்ற சிருங்கேரி சுவாமிகள், சிவலிங்கத்திற்கு மாவு பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர், சந்தனம், கங்கை, விபூதியில் அபிஷேகம் நடத்தி, பூஜை செய்து மகா தீபாராதனை நடத்தினார்.
தொடர்ந்து, பர்வதவர்த்தினி அம்மன் சன்னிதி கருவறை மற்றும் சேதுமாதவர் சன்னிதி கருவறைக்குள் சென்று பூஜை செய்து, மகாதீபாராதனை நடத்தி தரிசனம் செய்தார்.
மொத்தம் 2 மணி 5 நிமிடங்கள் வரை தரிசனம் செய்த சிருங்கேரி சுவாமிகள், மதியம் 12:35 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டார்.
பின், சிருங்கேரி மடத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, மதியம் 3:15 மணிக்கு திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 6:30 மணிக்கு, சிருங்கேரி சுவாமிகள் தனுஷ்கோடி சென்றார்.
தனுஷ்கோடி கடற்கரை மணலில் வில் அம்பு வரைந்த பூ அலங்காரத்தில் தனுர் பானம் பூஜை செய்து, அதன் மணலை கடலில் கரைத்த பின் புனித நீராடினார்.
பின், காலை 8:30 மணிக்கு ராமேஸ்வரம் கோவிலுக்கு திரும்பிய சுவாமிகள், 22வது கோடி தீர்த்தத்தில் புனித நீராடி விட்டு மடத்திற்கு சென்றார்.
செந்துாரில் வரவேற்பு
சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நேற்று திருச்செந்துார் வந்தடைந்தார்.
அவருக்கு, கோவில் நிர்வாகம் தரப்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கிருஷ்ணா மஹாலில் நடந்த சந்திர மவுலீஸ்வரர் பூஜையை அவர் நடத்தினார்.
பின்னர், கீழர தவீதியில் உள்ள சிருங்கேரி மடத்திற்கு சென்ற சுவாமிகள், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இன்று நடக்கும் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், விதுசேகர பாரதீ சுவாமிகள் பங்கேற்கிறார். அதன் பின், மடத்திற்கு செல்லும் சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

