ADDED : ஜூலை 18, 2025 11:48 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ( டிட்டோஜாக்) சார்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2வது நாளாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கு மேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.
டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவபாலன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில், மாவட்ட செயலாளர் முனியசாமி, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் ராஜேஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்தியரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முன்னதாக ரயில்வே பீடர் ரோட்டில் மறியல் செய்ய முயன்ற 300க்குமேற்பட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.