ADDED : நவ 23, 2024 06:33 AM
திருவாடானை; தொடர் மழையால் தொண்டி அருகே காரங்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது.
தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவருடைய மனதை கவரும் வகையில் மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. இப்பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டதால் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கடலுக்குள் அழைத்து சென்று சுற்றி காட்டுவதற்காக வனத்துறை சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அலையாத்தி காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டு ரசிக்கலாம்.
விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். கடந்த சில நாட்களாக தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. வனத்துறையினர் கூறுகையில், அவ்வப்போது சில சுற்றுலாப் பயணிகள் மட்டும் வருகின்றனர். மழையால் பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது என்றனர்.