/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காலங்கள் கடந்தும் கலையாத ஓவியமாய் மன்னர் காலத்தில் கட்டிய கல் சத்திரங்கள்
/
காலங்கள் கடந்தும் கலையாத ஓவியமாய் மன்னர் காலத்தில் கட்டிய கல் சத்திரங்கள்
காலங்கள் கடந்தும் கலையாத ஓவியமாய் மன்னர் காலத்தில் கட்டிய கல் சத்திரங்கள்
காலங்கள் கடந்தும் கலையாத ஓவியமாய் மன்னர் காலத்தில் கட்டிய கல் சத்திரங்கள்
ADDED : நவ 01, 2024 04:10 AM

திருவாடானை : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சத்திரங்கள் காலங்கள் கடந்தும் கலையாத ஓவியங்களாகவும், பாரம்பரிய சின்னங்களாகவும் திகழ்கின்றன.
திருவாடானை தாலுகா ராமாயண கதையோடு தொடர்புடையது. தொண்டி கிழக்கு கடற்கரை சாலையோரம் அமைந்துள்ளது தீர்த்தாண்டதானம். ராமபிரான் சீதையை தேடி இவ்வழியே சென்ற போது இங்கு இளைப்பாறினார். அவருக்கு தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்ததாக வரலாறு உள்ளது.
இதே போன்று பல்வேறு இடங்கள் ராமாயாணத்தோடு தொடர்புடையதாக வரலாறு உள்ளது. இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் காலத்தில் மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு சத்திரங்களை கட்டினர். அக்காலத்தில் வசதி படைத்தவர்கள் குதிரை சவாரி, மாட்டு வண்டி, குதிரை வண்டிகளை பயன்படுத்தினர்.
சாதாரண மக்கள் வெளியூர் செல்லவும், கோயில்கள், வியாபாரம் உள்ளிட்டவற்றிற்கு நடந்தே சென்றனர். பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய மன்னர்கள் நடந்து செல்பவர்கள், வழிபோக்கர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்தினர்.
சாலைகள், குடிநீர், தங்கி செல்ல சத்திரங்களை கட்ட நடவடிக்கை எடுத்தனர். ஒவ்வொரு ஐந்து மைல் துாரத்திற்கும் சத்திரங்கள் அமைத்தனர். அழகிய வேலைப்பாடுகள் கொண்ட துாண்கள் வைக்கபட்டன. இதையடுத்து நடந்து சென்ற மக்களுக்கு ஆத்மதிருப்தி ஏற்பட்டு களைப்பே இல்லாமல் உரிய இடத்திற்கு சென்று வந்தார்கள்.
காலப்போக்கில் போக்குவரத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் வந்தன. வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால் மக்கள் நடந்து செல்ல நேரமில்லாமல் போனது. ஆங்காங்கே கட்டப்பட்ட சத்திரங்கள் கண்டுகொள்ளப்படவில்லை.
பல நுாறு ஆண்டுகள் ஆகியும் திருவாடானை பகுதியில் கட்டப்பட்ட சத்திரங்கள் கம்பீரமாக காட்சியளித்தாலும், மக்கள் புழக்கம் இல்லாததால் சிதிலமடைந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் துறை ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது:
இப்பகுதியில் உள்ள சத்திரங்கள் பாண்டியர்கள் மற்றும் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்டது. புண்ணிய பயணத்திற்கு செல்வபர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதியாக சத்திரங்கள் கட்டுவதை மன்னர்கள் தலையாய கடமையாக செய்து வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கலியநகரி, எஸ்.பி.பட்டினம், தேவிபட்டினம், சிக்கல், தொண்டி, சேதுக்கரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சத்திரங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த பழமையான சத்திரங்கள் பல அறைகள் மற்றும் தாழ்வாரங்களுடன் செங்கல் கற்களால் கட்டப்பட்டது. பல சத்திரங்கள் அழிந்து வருகின்றன. பல சத்திரங்கள் அழிந்து விட்டன.
இது போன்ற சத்திரங்களை பழமை மாறாமல் சீரமைத்து பாரம்பரிய சின்னங்களாக பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.