/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயிலில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட்
/
கோயிலில் காட்சி பொருளான ஆர்.ஓ., பிளான்ட்
ADDED : ஜூன் 30, 2024 04:47 AM

திருப்புல்லாணி : - திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் அனைத்து பக்தர்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்ட உவர் நீரை நன்னீராக்கும் நிலையம் ஆறு ஆண்டுகளாக காட்சிப்பொருளான போதும் யூனியன் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளது.
இங்கு 2016ல் ரூ.8.50 லட்சத்தில் ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டது. திருப்புல்லாணி யூனியன் மற்றும் ஊராட்சி சார்பில் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பு நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2018 க்கு பிறகு எந்த பயன்பாடும் இல்லாமல் உவர்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாடின்றி முடங்கியுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கூறியதாவது:
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பத்மாஸனித் தாயார் சன்னதிக்கு இடது பக்க பிரகார வளாகத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் ஆரோ பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. இயந்திரங்கள் முறையாக பழுது நீக்கம் செய்யப்படாமலும் அதனை பராமரிப்பதற்கு உரிய பணியாளரை நியமிக்காமலும் இருப்பதால் இப்பிரச்சனை தொடர்ந்து நிலவுகிறது.
எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க பக்தர்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கு திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் பார்வையிட்டு பழுதை நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறக்கூடிய திட்டமாகும் என்றனர்.
----

