/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்திற்கு.. அச்சுறுத்தல்: கடலோர கிராமங்களில் பிளாஸ்டிக் குப்பையால்
/
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்திற்கு.. அச்சுறுத்தல்: கடலோர கிராமங்களில் பிளாஸ்டிக் குப்பையால்
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்திற்கு.. அச்சுறுத்தல்: கடலோர கிராமங்களில் பிளாஸ்டிக் குப்பையால்
மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்திற்கு.. அச்சுறுத்தல்: கடலோர கிராமங்களில் பிளாஸ்டிக் குப்பையால்
ADDED : ஆக 09, 2025 11:11 PM

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகத்தை ஓட்டியுள்ள கிராமங்களில் பிளாஸ்டிக் குப்பையை கடற்கரையோரம் கொட்டுவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கடல்சார் உயிர்க்கோளக் காப்பகமான மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களை ஓட்டி 10,500 சதுர கி.மீ., அளவுக்கு பரந்து விரிந்துள்ளது. இங்கு காணப்படும் பவளப்பாறைகள், கடல் தாவரங்களுக்கும், உயிரினங்களுக்கும் உறைவிடமாக திகழ்கிறது. இதில் 104 வகையான பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகையான கடல் புற்கள், சங்குகள், ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரியவகை உயிரினங்கள் உள்ளன. இவை கடலின் தட்பவெப்பத்தை பாதுகாக்காத்து இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. கடலோரங்களில் உள்ள மணற்பாங்கான கடற்கரை, சமவெளிகள், உவர்நீர் பகுதிகள், சதுப்பு நில உப்பங்கழிகள், அலையாத்தி காடுகளும் மன்னார் வளைகுடா உயிர்கோளக் காப்பகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடற்கரையையொட்டி காணப்படும் கிராமங்களில் மன்னார் வளைகுடா உயர்கோள காப்பகத்தின் முக்கியத்துவம் குறித்த முறையான வழிப்புணர்வு இல்லாததால் கரையோரம் குப்பை கொட்டி வருகின்றனர். இதனால் அழகான கடற்கரை அழியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியப்பட்டினம், முத்துப்பேட்டை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் ஏராளானமான குடும்பங்கள் வசிக்கின்றனர். அந்த பகுதியில் உள்ள குப்பையை முறையாக அப்புறப்படுத்தாமல் கடற்கரை அருகே கொட்டி வைக்கின்றனர். காற்று பலமாக வீசும் போதும், கடல் அலை அதிகமாக இருக்கும் போதும் கடற்கரையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பை கடலுக்குள் அடித்து செல்லப்படுகிறது.
இதனால் கடலில் காணப்படும் அரிய வகை கடல்பாசிகள், பவளப்பாறைகள் அழியும் நிலை உள்ளது. குப்பை மட்டுமின்றி கடற்கரையில் மதுபாட்டில்கள், உடைந்த பாட்டில் துகள்கள் சிதறி காணப்படுவதால் கடலோரம் ஒதுங்கும் ஆமைகள் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது. மன்னார் வளைகுடாவில் காணப்படும் கடல் பாசிகள் அங்குள்ள மீனவ மக்களின் வாழ்வாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கடலுக்குள் குப்பை அடித்து செல்வதால் அரியவகை கடற்பாசிகள் சேதமடைந்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து ராமநாதபுரம் வனக் காப்பாளரிடம் கேட்டப்போது, சம்பந்தப்பட்ட கிராம பஞ்சாயத்திடம் கடற்கரை ஓரம் தேங்கியுள்ள குப்பையை அப்புறுப்படுத்தி, வரும் காலத்தில் இதுபோன்று தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.
--