ADDED : பிப் 26, 2026 08:02 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலைவரையற்ற வேலை நிறுத்தம், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் முத்துராமலிங்கம், ஜெகநாத பூபதி ஆகியோர் தலைமை வகித்தனர். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார், முன்னாள் மாநில செயலாளர் காசிநாத துரை முன்னிலை வகித்தனர். அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், அறிவிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தில் 10 சதவீதம் பங்களிப்பு தொகை பிடிப்பதை ரத்து செய்ய வேண்டும். பணி பாதுகாப்புச் சட்டம், கருணை அடிப்படை பணி நியமனங்களில் மீண்டும் 25 சதவீதமாக உயர்த்துவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
வருவாய்த் துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவைத்துறை அலுவலர் சங்கங்களின் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடியது. ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறை உட்பட அனைத்து அலுவலக அறைகளும் பூட்டிக் கிடந்தன.
இதனால் அன்றாட அலுவலக பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகத்திற்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

