/
உள்ளூர் செய்திகள்
/
ராணிப்பேட்டை
/
விநாயகர் ஊர்வலம் அனுமதிக்க கோரி வழக்கு
/
விநாயகர் ஊர்வலம் அனுமதிக்க கோரி வழக்கு
ADDED : ஆக 30, 2024 03:18 AM
சென்னை:ராணிப்பேட்டை மாவட்டத்தில், விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கவும் உத்தரவிட கோரிய மனுவுக்கு, போலீசார் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து மக்கள் கட்சியின் வேலுார் மண்டல தலைவர் எஸ்.கே.மோகன் என்பவர் தாக்கல் செய்த மனு:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டத்தில், கஸ்பா, முப்பத்துவேட்டை, சன்னியாசி மடம் உள்ளிட்ட, 16 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. இந்த சிலைகளை வைக்கவும், அதை ஊர்வலமாக எடுத்து செல்லவும் அனுமதி கோரி, போலீசாரிடம் விண்ணப்பம் செய்யப்பட்டது.
அந்த விண்ணப்பம் மீது, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, விண்ணப்பத்தை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, செப்., 3க்கு விசாரணையை தள்ளிவைத்தார்.