அதிகாரிகள் ஜாதி பாகுபாடு: துாய்மை பணியாளர்கள் தர்ணா
அதிகாரிகள் ஜாதி பாகுபாடு: துாய்மை பணியாளர்கள் தர்ணா
ADDED : ஜூன் 09, 2026 06:51 AM

ராணிப்பேட்டை: வாலாஜா நகராட்சி அலுவலகத்தில், அதிகாரிகள் ஜாதி பாகுபாடுடன் நடந்து கொள்வதாக கூறி, துாய்மை பணியாளர்கள், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா நகராட்சியில், 80க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இந்த பணியாளர்களை, ஜாதி தீண்டாமை காரணமாக, நகராட்சி அலுவலகத்தில் வைத்து கையெழுத்து போட அனுமதிப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே, துாய்மை பணியாளர்கள், ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட் டனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:
வாலாஜா நகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் கையொப்பமிட்டு வந்தனர். சமீப காலமாக வெளிப்புறங்களில் உள்ள கடைகளில் வைத்து பணியா ளர்களை கையொப்பமிட செய்து, தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது.
நகராட்சிக்கு அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மட்டும், நகராட்சி அலுவலகத்திற்குள் கையொப்பமிட அனுமதிக்கின்றனர். மாத ஊதியத்தை, மாதத்தின் முதல், 10 நாட்களில் வழங்காமல், 20 நாட்கள் கடந்து வழங்கப்படுகிறது. அதுவும் நேரடியாக ஊதியம், வங்கி கணக்கில் வழங்கப்படுவதில்லை.
துாய் மை பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ பரிசோதனை எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால், எங்கள் மீது அடக்குமுறை நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
