தி.மு.க., வேட்பாளர் 'திடீர்' மாற்றம்: மகனுக்கு பதில் தந்தை போட்டி
தி.மு.க., வேட்பாளர் 'திடீர்' மாற்றம்: மகனுக்கு பதில் தந்தை போட்டி
ADDED : ஏப் 06, 2026 10:57 PM

ராணிப்பேட்டை:தி.மு.க., சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில், அமைச்சர் காந்தியின் மகன் வினோத் போட்டியிடுவார் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அறிவித்த நிலையில், அமைச்சர் காந்தி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாத அமைச்சர்களில் காந்தியும் ஒருவர். இதனால், அதிருப்தியில் இருந்த அவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தன் மகன் வினோத்துக்கு எதிராக இருந்தார். இதனால், தேர்தல் பணியை துவக்குவதில் இழுபறி நீடித்தது.
இந்த நிலையில், தன் தந்தை விருப்பத்திற்கு இணங்க, தன் வாய்ப்பை அவருக்கு வழங்குவதாக, சமூகவலைதளத்தில் வினோத் பதிவிட்டிருந்தார். இந்த அறிவிப்பு சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் காந்தி, ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் ராஜியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இது குறித்து காந்தி கூறுகையில், “தேவையற்ற சர்ச்சைக்கு பதிலளிக்க விரும்பவில்லை. என் மகன் வினோத், என்னுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளார். தலைமையின் உத்தரவுப்படியே, நான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்,”' என்றார்.
காந்தியின் மகன் வினோத் கூறுகையில், “தனக்கு சீட் வேண்டும் என என் தந்தை விரும்பினார். அவரது ஒத்துழைப்பின்றி நான் களப்பணியாற்றுவது கடினம். மேலும், கட்சி தலைமையும் என் தந்தைக்கு 'பி பார்ம்' வழங்கியதால், நான் போட்டியில் இருந்து விலகி கொண்டேன்,” என தெரிவித்தார்.
