ADDED : ஜன 24, 2025 01:35 AM
பயிற்சி இறுதியாக வயல் தினவிழா
வீரபாண்டி, : வீரபாண்டி வட்டார வேளாண்மைத்துறை, தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில், இனாம் பைரோஜி நெல் பண்ணைப்பள்ளியில், 3 மாதங்களாக வயல்வெளி பயிற்சி வகுப்புகள், 5 கட்டங்களாக நடந்தது. இறுதி வகுப்பான நேற்று முன்தினம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி தலைமையில், வயல் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
அதில், ஓய்வு பெற்ற துணை வேளாண் அலுவலர் பழனிசாமி, நெல் பயிரில் விதைப்பு முதல் அறுவடை, அறுவடைக்கு பின் நேர்த்தி, மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார். முன்னோடி விவசாயி மாதேஸ்வரனின், 2.5 ஏக்கர் நெல் வயலில், 25 விவசாயிகள், 5 குழுக்களாக பிரிந்து, 5 மீ.,க்கு, 5 மீ., அளவில் நெல் அறுவடை செய்து ஹெக்டேருக்கு எவ்வளவு மகசூல் கிடைத்தது என கணக்கிட்டனர். துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
