/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சித்தர்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
சித்தர்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : செப் 16, 2024 03:28 AM
மகுடஞ்சாவடி: சேலம் அருகே கஞ்சமலை காலங்கி சித்தர்கோவில் உள்ளது. அதன் அருகே காளியம்மன், முருகன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு நேற்று காலை, 6:30 முதல், 10:45 மணி வரை, 3 கட்டமாக கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக இரு நாட்களாக சிவாச்சாரியார்கள், 3 கோவில்களிலும் யாக குண்டங்கள் அமைத்து மந்திரங்கள் ஓதினர். ஹோம குண்டத்தில் பல அரிய மூலிகைகள், பல்வேறு வித கனிகள், பட்டு துணிகள், பல லிட்டர் நெய்யை ஊற்றி, தீயை வளர்த்து யாக சாலையில் வேதமந்திரங்கள் ஓதினர். நேற்று அதிகாலை, 5:00 மணி முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். 700க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
யாகசாலையில் இருந்து மந்திர உரு ஏற்றிய தீர்த்தக்குடங்களை தலையில் சுமந்தபடி, நல்லணம்பட்டியை சேர்ந்த, காணியாச்சிதாரர் திருமலைகவுண்டர் வகையறாவை சேர்ந்த குடும்பத்தினர், பின் தொடர குருக்கள் கோவில் கோபுரத்தை அடைந்து கற்பூர தீபம் காட்டி மந்திரம் ஓதினர்.
குடத்தில் இருந்த தீர்த்தத்தை கோபுர கலசங்களுக்கு ஊற்றினர். பின் சித்தர்கோவில் கோபுரம் அருகே வைக்கப்பட்டிருந்த, 4 பேரல்களில் இருந்த தீர்த்தநீரை, பிரத்யேகமாக தயாராக வைத்திருந்த, மின்மோட்டார் பொருத்திய தெளிப்பான் மூலம், கோவிலை சுற்றி கூடியிருந்த பக்தர்கள் மீது தெளித்தனர். பின் பக்தர்கள், சித்தரை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு சென்றனர். கும்பாபிஷேகம் முடிந்தும், குடும்ப சகிதமாக கோவிலுக்கு வந்து இரவு, 8:00 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இன்று
ஆத்துார் அருகே நரசிங்கபுரம் ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவிலில் கோபுர கலசங்கள் மீது, சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைத்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகே உள்ள பழமையான வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷகம் இன்று காலை, 9:45 முதல், 10:25 மணிக்குள் நடக்கிறது.
தேரோட்டம்
ஆத்துார் அருகே கல்லாநத்தம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர், கருப்பையா, செல்லியம்மன், அய்யனார் உள்ளிட்ட சுவாமிகள் உள்ளன. கடந்த, 6ல் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று காலை, மாரியம்மன் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மதியம் தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேரை, முக்கிய வீதிகள் வழியே இழுத்து வந்தனர். மாலை, 6:00 மணிக்கு தேர் கோவிலை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

