/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
லட்சக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி?முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்
/
லட்சக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி?முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்
லட்சக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி?முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்
லட்சக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி?முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்
ADDED : பிப் 23, 2025 01:31 AM
லட்சக்கணக்கில் முதலீடு பெற்று மோசடி?முற்றுகையிட்ட முதலீட்டாளர்கள்
சேலம் :கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ், சேலம், ஸ்வர்ணபுரி, அய்யர் தெருவில், 2 ஆண்டுக்கு முன், ஒரு கட்டடத்தை வாடகைக்கு எடுத்து, 'ரீ கிரியேட் பியூச்சர் இந்தியா' பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். அங்கு பகுதி நேரம், முழு நேரம் வேலை செய்தால், 4,000 முதல், 25,000 வரை சம்பளம் கிடைக்கும் என, அந்நிறுவனம் சார்பில் துண்டு பிரசுரம் அச்சடித்து, மக்களிடம் வினியோகிக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர், அங்கு வந்தனர்.
அப்போது, 'நிறுவனத்தில் சேரும் ஒருவர், 3,500 ரூபாய் செலுத்த வேண்டும். அப்படி செலுத்துவோருக்கு, சில்வர் பாத்திரம், வாரம், 650 ரூபாய் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. அத்துடன், 50,000, 1 லட்சம், 2 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அதற்கேற்ப குறிப்பிட்ட மாதத்தில், பணம் இரட்டிப்பாக தரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமானோர், அந்த
நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். இந்நிலையில் நேற்று, அந்த நிறுவனத்தை ராஜேஷ் காலி செய்வதாக தகவல் வெளியானது. இதனால் முதலீடு செய்தவர்கள், மாலையில், அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டனர். உடனே மாநகர போலீஸ் துணை கமிஷனர் கீதா தலைமையில், பள்ளப்பட்டி போலீசார் வந்து விசாரித்தனர். குறிப்பாக மோசடி நடந்துள்ளதா என, நிறுவன ஊழியர்களிடம் விசாரித்தனர். அங்கு ஏஜன்டாக செயல்படும், 70 பெண்கள் இருந்தனர். அவர்கள் வெளியே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. அந்த நிறுவனத்தில் உள்ள, 2 அறைகள் பூட்டி வைக்கப்பட்டிருந்தன. அதன் சாவிகளை கேட்டபோது, 'எங்களுக்கு தெரியாது' என பணியாளர்கள் தெரிவித்தனர். இதனிடையே ராஜேைஷ, பள்ளப்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரிக்கின்றனர்.
மேலும், 2 ஆண்டுகளில் எத்தனை பேரிடம், எவ்வளவு முதலீடு பெறப்பட்டுள்ளது, ஏஜன்டாக செயல்படும், 70 பெண்களின் விபரம் குறித்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர். இதனால், அந்த நிறுவனம் முன், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். முழு விசாரணைக்கு பின், உரிய தகவல் தெரிவிக்கப்படும் என கூறியதால், முற்றுகையிட்டவர்கள் கலைந்து சென்றனர்.