ADDED : மார் 14, 2025 02:00 AM
பள்ளி மாணவர்களுக்குஇந்தி புத்தகம் வழங்கிய பா.ஜ.,
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை ஒட்டி, பா.ஜ., சார்பில், பட்டிமன்றம், நலத்திட்ட உதவி வழங்கும் விழா, பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.
அதில் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் பேசுகையில், ''தமிழகத்தில் தமிழ் கட்டாய மொழியாக இருக்க வேண்டும். இணைப்பு மொழி ஆங்கிலம். மூன்றாவதாக விருப்ப மொழியாக இந்திய மொழிகளில் ஒன்று இருக்கலாம். இதை திரித்து இந்தி எதிர்ப்பு என, ஊரை ஏமாற்றுகின்றனர்,'' என்றார்.
தொடர்ந்து ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கினார். பின் மேடைக்கு அழைத்து வரப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, இந்தி புத்தகம் வழங்கினார்.
சேலம் லோக்சபா தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட செயலர் கந்தசாமி, பொதுச்செயலர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னுராஜ், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேஷ்பாபு, வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் வெங்கடாசலம், பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றிய தலைவர் நிர்மலா உள்பட பலர் பங்கேற்றனர்.
