ADDED : ஏப் 15, 2025 02:09 AM
கெங்கவல்லி:
கெங்கவல்லி, மயானம் வழிப்பாதை அருகில், டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் இருந்த பாரில் ஆறு மாதங்களுக்கு முன், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், பார் மூடப்பட்டது. இந்நிலையில் ஒதியத்துாரை சேர்ந்த சக்திவேல் மனைவி ஜெயலட்சுமி, 38, சில தினங்களுக்கு முன், பெட்டிக்கடை அமைத்து தண்ணீர் பாட்டில், தின்பண்டம் விற்றுள்ளார். அதன்பின் அந்த கடையில், டாஸ்மாக் கடை திறக்காத நேரத்தில், மதுபாட்டில் விற்பதாக வந்த புகார்படி, நேற்று காலை கெங்கவல்லி போலீஸ் ஏட்டு செந்தில் ஆய்வு செய்தார். அப்போது, மதுபாட்டில் விற்பதை பார்த்து, 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ஜெயலட்சுமியை ஸ்டேஷன் வரும்படி கூறியுள்ளார்.
அப்போது, கெங்கவல்லி வி.சி., முன்னாள் நகர செயலரும், முன்னாள் கவுன்சிலருமான ராஜா, 54, நண்பர்களான அரசு பஸ் கண்டக்டர் இலுப்பதோப்பு ஜெயச்சந்திரன், 51, சேலம் மெய்யனுார் கிளையில் டிரைவரான கெங்கவல்லி நீலகண்டன், 50, ஆகியோர், மது போதையில் போலீசாரிடம் தகாத வார்த்தையில் திட்டி, ரகளை செய்தபடி மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, மதுபாட்டில் விற்ற ஜெயலட்சுமி, வி.சி., முன்னாள் நகர செயலர் ராஜா, அரசு பஸ் கண்டக்டர் ஜெயச்சந்திரன், டிரைவர் நீலகண்டன், 50, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின் இரவு, 7:00 மணியளவில் கடைக்கு சீல் வைத்தனர்.
