ADDED : பிப் 13, 2025 01:06 AM
ஆதியோகி ரதத்தை இழுத்த பக்தர்கள்
வீரபாண்டி:தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், 63 நாயன்மார்களின் பெருமைகளை உலகறிய செய்யும்படி, உற்சவ திருமேனிகளுடன், ஆதி சிவயோகி கருங்கல் சிலை எழுந்தருளிய மரத்தேரை இழுத்துக்கொண்டு, சென்னையில் இருந்து கோவை, வெள்ளியங்கிரிக்கு கடந்த ஜன., 26ல் பாதயாத்திரையை தொடங்கினர். 'சிவனோடு ஒரு பயணம்' பெயரில் தொடங்கிய, சிவ பக்தர்களின் யாத்திரை வரும், 24ல் வெள்ளியங்கிரியில் நிறைவு பெறும்.
இந்த பாத யாத்திரை குழுவினர் நேற்று சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து புறப்பட்டனர். தொடர்ந்து நெடுஞ்சாலை வழியே சிவ வாத்தியம் முழங்க, 63 நாயன்மார்களில் முக்கியமான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகிய நால்வர் திருமேனிகளை தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளச்செய்து, தோளில் சுமந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
அதேபோல் சிறு மரத்தேரில் எழுந்தருளிய ஆதிசிவயோகி ரதத்தையும், கயிறு கட்டி, 'ஓம் நமச்சிவாய' கோஷம் எழுப்பி, நேற்று மாலை வீரபாண்டி அங்காளம்மன் கோவிலுக்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து அங்கேயே தங்கினர். இன்று அங்கிருந்து புறப்பட்டு, நாமக்கல் மாவட்டம் மோர்
பாளையம் செல்கின்றனர்.

