ADDED : பிப் 20, 2025 01:44 AM
லாரி மோதி பேராசிரியர் பலி
சேலம்:சேலம் சிவதாபுரம், தும்பாதுாளிப்பட்டியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 36. இவருக்கு திருமணமாகி, மகன், மகள் உள்ளனர். சத்தியமூர்த்தி, அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள தனியார் கல்லுாரியில் விலங்கியல் பேராசிரியராக பணிபுரிந்தார். நேற்று காலை, 9:30 மணிக்கு, ஹூரோ ஹோண்டா பைக்கில், கல்லுாரிக்கு புறப்பட்டார். கந்தம்பட்டி மேம்பாலத்தின் கீழ் சென்றபோது, கரூரில் இருந்து மரத்துாள் ஏற்றிவந்த லாரி மோதியது.
இதில், சத்தியமூர்த்தி அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று விழுந்து, தலையில் படுகாயம் ஏற்பட்டது. மக்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியில் அவர் உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார், மேச்சேரியை சேர்ந்த லாரி டிரைவர் யோகேஸ்வரனை பிடித்து விசாரிக்கின்றனர்.
லாரி மோதி ஒருவர் பலி
மகுடஞ்சாவடியில் இருந்து கொங்கணாபுரத்துக்கு நேற்று லாரி வந்து கொண்டிருந்தது. மதியம், 1:15 மணிக்கு கன்னந்தேரி அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் பிளாஸ்டிக் கவர், பாட்டில் பொறுக்கும், 50 வயது மதிக்கத்தக்க அடையாள தெரியாத ஆண், லாரியின் பின்புற சக்கரத்தில் சிக்கினார். 20 அடி துாரம் இழுத்து செல்லப்பட்ட அவர், சம்பவ இடத்தில் பலியானார். கொங்கணாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

