ADDED : மார் 18, 2025 01:56 AM
மூதாட்டியிடம் நுாதனமாகநகை பறித்த செவிலியர் கைது
சேலம்:காடையாம்பட்டி அடுத்த கே.மோரூர், மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் மதலைமுத்து, 75. உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், கடந்த பிப்., 26ல், சேலம், 5 ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு உதவியாக மனைவி பாத்திமாமேரி, 70, தங்கியிருந்தார். கடந்த, 1ல் பாத்திமா மேரிக்கு பல் வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். அப்போது பணியில் இருந்த செவிலியர் ரம்யா, 27, மூதாட்டியை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளார்.
அப்போது மூதாட்டி தலைமுடியை சரிசெய்வது போல், அவர் அணிந்திருந்த, 5 பவுன் தங்க சங்கிலியை கழற்றி, அதை மறைத்து வைத்துவிட்டார். சிறிது நேரத்தில் சங்கிலி இல்லாததை உணர்ந்த மேரி, மருத்துவமனை நிர்வாகம் மூலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் மதிப்பு, 1.50 லட்சம் ரூபாய். போலீசார் விசாரணைக்கு பின், ரம்யாவை நேற்று கைது செய்து, நகையை மீட்டனர்.
