ADDED : மார் 19, 2025 01:27 AM
விளக்கு விழுந்து தீக்காயம்முன்னாள் கவுன்சிலர் பலி
ஆத்துா:ஆத்துார், சிவகுரு தெருவை சேர்ந்தவர் பழனிசாமி, 76. தி.மு.க., முன்னாள் கவுன்சிலரான இவர், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு வீட்டின் சுவாமி அறையில் இருந்தார். அப்போது, விளக்கு அவர் மீது விழுந்தது. உடை, அறையில் இருந்த துணிகள் தீப்பற்றி எரிந்தது. அவரை குடும்பத்தினர் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆசிரியை தற்கொலைகணவர் கொன்றதாக புகார்
ஓமலுா:சேலம் மாவட்டம் காடையாம்பட்டி, தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுதா, 35. பெரியப்பட்டி அரசு பள்ளி அங்கன்வாடியில் ஆசிரியையாக பணியாற்றினார்.
இவரது கணவர் அய்யப்பன், 37, அதே பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
சில மாதங்களாக தம்பதி இடையே கருத்து வேறுபாடால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கடந்த, 9ல் சுதா எலி மருந்து குடித்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, சுதாவின் தாய் கோவிந்தம்மாளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை மருத்துவமனையில் சுதா உயிரிழந்தார்.
இதையடுத்து கோவிந்தம்மாள், சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், 'மருமகன் விஷம் வைத்து மகளை கொன்றுவிட்டார்' என கூறியுள்ளார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
