/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்
/
சேலம் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்
ADDED : ஏப் 01, 2025 01:42 AM
சேலம் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை கோலாகலம்
சேலம்:சேலம் மாவட்டத்தில், இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை நேற்று கொண்டாடினர்.நேற்று அதிகாலை முதல், பள்ளி வாசலில் திரண்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். சேலம் மாநகரில் உள்ள ஜாமிய மஸ்ஜித், ஜாகீர் அம்மாபாளையம் ஈத்கா மைதானம், கோட்டை மஸ்ஜித், பொன்னம்மாபேட்டை மஸ்ஜித், குமாரசாமிபட்டி ரஹ்மான்யா மஸ்ஜித், 4 ரோடு மக்மூர் மஸ்ஜித், முள்ளுவாடி கேட் மஸ்ஜித் உள்பட பல்வேறு பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள், புத்தாடை அணிந்து கொண்டு, சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்தவுடன், ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பின், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பிரியாணி வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
* ஓமலுார் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள முகமது பள்ளி வாசலில் இருந்து, முத்தவல்லி ரஜாக் தலைமையில், 1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் திரண்டு கடைவீதி, தாலுகா அலுவலகம் வழியாக, ஈத்கா மைதானத்தை அடைந்தனர். அங்கு, கலீல் அஜ்ரத், காஜாமைதீன் ஆகியோர் தலைமையில், 9:30 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்து வெளியே வந்த அவர்களுக்கு, ஓமலுார் டவுன் பஞ்., தலைவி செல்வராணி, தளபதி நற்பணி மன்ற தலைவர் மகேந்திரன் இனிப்பு வழங்கினர்.
* காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி அருகே, இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று, அய்யன்காட்டுவளவு பகுதியில், வருவாய்த்துறையினரால் புதிதாக வழங்கப்பட்ட இடத்தில், மதினா ஜமாத் சார்பில், சிறப்பு தொழுகை நடந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தீவட்டிப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* இஸ்லாமியர்களின் முக்கிய பெருநாளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகையையொட்டி, ஆத்துார் புதுப்பேட்டை பகுதியில் சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து மார்க்கம் குறித்த சொற்பொழிவு நடந்தது. ஏராளமான ஆண்களும், பெண்களும் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். தொழுகைக்கு பின், ஒருவருக்கொருவர் கட்டித்தழுவியும், கை குலுக்கியும் வாழ்த்துக்கள் பரிமாறிக் கொண்டனர்.
அதேபோல், நரசிங்கபுரம், தலைவாசல், வீரகனுார், கெங்கவல்லி, தம்மம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், முஸ்லிம் சமுதாயத்தினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

