ADDED : மார் 31, 2026 05:53 AM
சேலம், சோமவார பிரதோஷத்தையொட்டி, சிவாலயங்களில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், சோமவார (திங்கள் கிழமை) பிரதோஷத்தையொட்டி, நேற்று மாலை 4:30 மணிக்கு அதிகார நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், கரும்புச்சாறு உள்ளிட்ட, 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிேஷகம் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சொர்ணாம்பிகை அம்மன் சமேத சுகவனேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் ரிஷப வாகனத்தை தங்கள் தோளில் சுமந்து, சிவ, சிவ கோஷங்கள் முழங்கியபடி மூன்று முறை கோவிலை வலம் வந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுகவனேஸ்வரரை வழிபட்டனர். இதே போல் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், 2வது அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவில், செவ்வாய்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும் நடந்த பிரதோஷ விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* ஆத்துார், கைலாசநாதர் கோவிலில், சோமவார பிரதோஷ பூஜையையொட்டி, கைலாசநாதர் மற்றும் நந்தி பகவானுக்கு பல்வேறு அபிேஷக பூஜை நடந்தது. பின், புஷ்ப அலங்காரத்தில் கைலாசநாதர், நந்தி பகவான் அருள்பாலித்தனர்.
அதேபோல், ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர், வெள்ளப்பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனுார் கங்காசவுந்தரேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், தம்மம்பட்டி காசிவிஸ்வநாதர், தலைவாசல், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சோமவார பிரதோஷ பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு
செய்தனர்.
