ADDED : ஜூலை 10, 2024 07:12 AM
சேலம்: மத்திய அரசு புதிதாக நடைமுறைப்படுத்தியுள்ள, 3 குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி, சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் சார்பில் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார். அதில், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து விவேகானந்தன் கூறுகையில், ''புது சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, வரும், 12 வரை நீதிமன்ற பணியை புறக்கணிக்கிறோம்,'' என்றார். இதில் துணைத்தலைவர் சுகவனேஸ்வரன், பொருளாளர் அசோக்குமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் மேட்டூர் அணை வக்கீல்கள் சங்கம் சார்பில், வக்கீல்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து தபால் அலுவலகத்துக்கு பேரணியாக சென்றனர். அங்கு, 3 சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் ஜேம்ஸ் சார்லஸ், செயலர் செந்தில்குமார், பொருளாளர் விஜயராகவன் உள்பட பலர், மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.