ADDED : ஏப் 02, 2025 01:45 AM
நாய் கடித்து சிறுவன் பலி12 பேருக்கு தடுப்பூசி
சேலம்,:சேலம், வீராணம் அருகே, வலசையூர், இளங்கோ நகரை சேர்ந்த தொழிலாளி முனுசாமியின் மகன் கிேஷார், 9. நான்காம் வகுப்பு படித்த மாணவனை, ஓராண்டுக்கு முன் நாய் கடித்துள்ளது. தடுப்பூசி போடாமல், அவரது பெற்றோர் அலட்சியம் காட்டிள்ளனர். நாய் கடி விஷத்தால், கடந்த, 29ல், ரேபீஸ் காய்ச்சல் உண்டாகி, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் இறந்துவிட்டார். பின் பிரேத பரிசோதனை செய்யாமல், அவரது சடலம் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, சிறுவனின் வீட்டுக்கு சென்ற சுகாதாரத்துறையினர் அவரது பெற்றோர் உள்பட குடும்பத்தினர், 6 பேர், சிறுவர்களுடன் பழகியவர்கள் என, மொத்தம், 12 பேருக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தினர். ஒருவருக்கு தலா, 4 ஊசி போடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் ரேபீஸ் பாதிப்பு வேறு யாருக்காவது உள்ளதா என, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு
வருகின்றனர்.
