/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரூர் அகல ரயில்பாதை நிலத்துக்கு இழப்பீடு தராததால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி
/
கரூர் அகல ரயில்பாதை நிலத்துக்கு இழப்பீடு தராததால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி
கரூர் அகல ரயில்பாதை நிலத்துக்கு இழப்பீடு தராததால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி
கரூர் அகல ரயில்பாதை நிலத்துக்கு இழப்பீடு தராததால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஜப்தி
ADDED : ஆக 20, 2024 03:21 AM
சேலம்: சேலம்-கரூர் அகல ரயில்பாதை நிலத்துக்கு இழப்பீடு தராததால், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சீலிங் பேன் உள்பட மர டேபிள், கணினிகள் உள்ளிட்டவை ஜப்தி செய்யப்பட்டன.
சேலம்-கரூர் அகல ரயில் பாதைக்காக, 1999ல் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இழப்பீடு வழங்கப்பட்டன. சேலத்தில் அமானிகொண்டலாம்பட்டி, நாழிக்கல்பட்டி, வேங்காம்பட்டியில் நிலம் கொடுத்தவர்கள் கூடுதல் இழப்பீடு கேட்டு, அதே ஆண்டில், சேலம் மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை முடிவில், அப்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப, சதுரடிக்கு குறைந்து, 23.50 ரூபாய் முதல் அதிகபட்சம், 100 ரூபாய் வரை வழங்க உத்தரவிட்டு, 2003ல், நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து, சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு, 2011ல் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கலான மனுவும் தள்ளுபடி ஆனது.
அதன்பின் மாவட்ட நிர்வாகம் சார்பில், வழக்கை சரிவர மேற்கொள்ளாமல், 14 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. கூடுதலாக வழங்க வேண்டிய இழப்பீடு தொகை, ஏற்கனவே தாமதமாக வழங்கிய இழப்பீடுக்கான வட்டியுடன் சேர்த்து, 12 லட்சத்து, 34 ஆயிரத்து, 329 ரூபாயை தற்போது வரை வழங்காமல், மாவட்ட நிர்வாகமும், ரயில்வே துறையும் காலம் கடத்தி வந்தன. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று, ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிபதி கலைவாணி கடந்த, 8 ல், உத்தரவிட்டார். அதன்படி கடந்த, 16ல், சேலம் ரயில்வே கோட்ட கட்டுமான பிரிவில், 4.14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தளவாடங்கள் ஜப்தி செய்யப்பட்டன. தொடர்ந்து, நீதிமன்ற அமீனாக்கள் ஜோசப், தங்கராஜ், ரமேஷ் உள்ளிட்ட ஐவர், சேலம் கலெக்டரின் நிலஎடுப்பு நேர்முக கூடுதல் உதவியாளர் அலுவலகத்துக்கு நேற்று காலை, 11:00 மணிக்கு வருகை தந்தனர்.
அவர்களுடன் நிலம் கொடுத்தவர்களும் இருந்தனர்.நேர்முக கூடுதல் உதவியாளர் சின்னசாமியிடம், நீதிமன்ற உத்தரவை காண்பித்து, ஜப்தி நடவடிக்கை மேற்கொள்வதை சுட்டிக்காட்டினர். அதையடுத்து, அவரது அறையில் உள்ள ஏசி, சீலிங் பேன் உள்பட மர டேபிள், 29, கணினிகள், 25, உள்ளிட்டவை ஜப்தி செய்யப்பட்டு, அவர்களது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.
ஜப்தி பொருட்களின் பட்டியல் தயாரித்து, அதில் சின்னசாமியின் கையொப்பம் பெற்று, அதன் நகலை வழங்கிவிட்டு சென்றனர். இந்த வழக்கு மீண்டும் வரும், 29ல் விசாரணைக்கு
வருகிறது என, மனுதாரர் வக்கீல்
புவனேஸ்வரன் தெரிவித்தார்.

