ADDED : மே 09, 2026 04:14 AM
வாழப்பாடி சேலம் மாவட்டம் பேளூர், பெருமாபாளையத்தை சேர்ந்த கொத்தனார், வாழப்பாடி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதில் கொத்தனாரின் மகனிடம், இரு இளைஞர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கொத்தனாரின், 6 வயது மகன், வீடு முன் விளையாடி கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் மாயமானான்.சில மணி நேரங்களுக்கு பின், அதே பகுதியில் உள்ள ஒரு தனி அறையில் இருந்து சிறுவன் வந்தான். ஒரு மாதிரியாக சிறுவன் இருந்ததால், பெற்றோர் விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த, பிளஸ் 2 மாணவரும், கொத்து வேலைக்கு செல்லும் ஒரு இளைஞரும், தனி அறையில் அடைத்து வைத்து, வாயில் போதை பொருட்களை கொட்டி, பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது.
பின் சிறுவனை, வாழப்பாடி அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர்.தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். இதுகுறித்த புகார்படி வழக்குப்பதிந்து, இருவரிடம் விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
