ADDED : ஜன 11, 2025 01:52 AM
சேலம்,: நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த, 8ல் கடலுாரில் பேட்டி அளித்தபோது, ஈ.வெ.ரா., குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் தி.க., தி.வி.க., வி.சி.க.,வினர், போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில், எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவுப்படி, மேட்டூர், கொளத்துார், கருமலைக்கூடல், இடைப்பாடி, ஏற்காடு, ஆத்துார் டவுன், ஊரகம் என, 7 ஸ்டேஷன்களில், சீமான் மீது, 2 பிரிவுகளில் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு செய்தியை வெளியிடுவது, கலவரத்தை துாண்டும்படி செயல்
படுதல் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கமிஷனர் ஆபீசில் புகார்
சேலம் மாவட்ட திராவிட கழக தலைவர் வீரமணிராஜூ, செயலர் பூபதி, காப்பாளர் ஜவகர், தலைமை அமைப்பாளர் பாலு ஆகியோர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ யு - டியூபில், ஈ.வெ.ரா., குறித்து, சீமான் கேவலமான முறையில் பேசியுள்ளார். அவர் சுய லாபத்துக்கு, ஈ.வெ.ரா.,வின் நன்மதிப்பை குலைக்கும்படி, ஆதாரமின்றி பொய் செய்தியை பேசியுள்ளார். யு - டியூபில் இருந்து அவரது பேச்சை நீக்குவதோடு, சீமான் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். அதேபோல் திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்ட செயலர் சுந்தரவதனம், கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
