ADDED : அக் 23, 2024 01:44 AM
'டவுசர்' கொள்ளையர் 2 பேர் கைது
ஆத்துார், அக். 23-
நரசிங்கபுரம், நேதாஜி நகரை சேர்ந்தவர் தங்கவேல், 63. இவர் கடந்த செப்., 4ல், வீட்டில் இருந்தார். அன்று இரவு, 11:30 மணிக்கு, 4 பேர் 'டவுசர்' அணிந்து முகமூடி போட்டு, கையில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு கொள்ளையடிக்க வந்தனர். தங்கவேல் மின்விளக்கு போட்டதால், 4 பேரும் தப்பினர். அங்கு, 'சிசிடிவி' கேமராவில் பதிவான வீடியோவை வைத்து ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்தனர்.
ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் இரு தனிப்படை அமைத்து, மர்ம நபர்களை தேடினர். விசாரணையில் தேனி மாவட்டம், பெரியகுளம், செம்மங்குடியை சேர்ந்த செல்லமுத்து, 26, ராமநாதபுரம் அருள்ராஜ், 33, உள்பட, 4 பேர் என தெரிந்தது. இதில், செல்லமுத்து, அருள்ராஜை நேற்று ஆத்துார் டவுன் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இவர்கள் துாத்துக்குடி, திண்டுக்கல், சாத்தான்குளம், தேவக்கோட்டை, காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் முகமூடி அணிந்து திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இருவர் மீதும் தலா, 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன' என்றனர்.

