ADDED : நவ 02, 2025 02:26 AM
ஆத்துார்: நில தகராறு குறித்து போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்த இரு தரப்பினரில், ஒருவர் எஸ்.ஐ.,யை தாக்க முயன்றதால், 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே மல்லியக்கரை, வண்ணாத்திக்குட்டையை சேர்ந்தவர் விஜயபெருமாள், 42. இவர், அதே பகுதியை சேர்ந்த விவசாயி சேகர், 47, என்பவருக்கு, 2019ல் ஒன்றரை ஏக்கர் நிலத்தை விற்றுள்ளார்.
அந்த இடத்தில் இருந்து சாலையை ஒட்டி, 10 அடிக்கு உள்ள நிலம், தனக்கு சொந்தம் என விஜயபெருமாள் கூறியுள்ளார். இதுதொடர்பாக, ஆத்துார் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
அக்., 27ல், சேகர், மின் ஒயர்களுக்கு இடையூறாக இருந்த, 10 அடி உயரம் கொண்ட மூன்று மரங்களை அகற்றியுள்ளார். இதில் இருதரப்பினருக்கும் பிரச்னை எழுந்தது. இருதரப்பினரும் மல்லியக்கரை போலீசில் புகார் அளித்தனர்.
எஸ்.ஐ., லாசர் கென்னடி விசாரித்த போது, விஜயபெருமாள் தரப்பை சேர்ந்த சேலம், அம்மாபேட்டை அருண்பாலாஜி, 22, மொபைல் போனை, எஸ்.ஐ., மீது வீசினார். இது தொடர்பாக, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
