/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்ரோஷத்துடன் களைகட்டிய மயான கொள்ளை
/
ஆக்ரோஷத்துடன் களைகட்டிய மயான கொள்ளை
ADDED : பிப் 18, 2026 07:50 AM

சேலம்: மயான கொள்ளையை முன்னிட்டு, சேலத்தில் ஏராளமான பக்தர்கள், 15 நாட்களுக்கு முன்பே விரதத்தை தொடங்கினர். மஹா சிவராத்திரியன்று, அங்காள அம்மனுக்கு பூஜை செய்து வழிபட்டனர். மாசி அமாவாசையான நேற்று, மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு, சேலத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் உள்ள அம்மன் சுவாமிகளுக்கு பல்வேறு வித மலர்களால் அலங்காரம் செய்து, ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
விரதமிருந்த பக்தர்கள், காளி வேடமணிந்து வண்ணங்களை முகத்தில் பூசி மயில் தோகையை உடலில் கட்டிக்கொண்டு ஆடியபடி, காக்காயன் சுடுகாடு நோக்கி சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அப்போது சில பக்தர்கள், உயிருடன் உள்ள கோழி, ஆடுகளை வாயில் கடித்தபடி, ஆக்ரோஷமாக சென்றனர். அந்த நேரத்தில் காக்காயன் சுடுகாட்டில் காத்திருந்த பக்தர்கள் வழிநெடுக படுத்துக்கொண்டனர். அவர்களை, ஆக்ரோஷமாக வந்த அம்மன் வேடமணிந்த பக்தர்கள், தாண்டி சென்றனர்.
இப்படி ஆசி பெற்றால், நோய் உள்ளிட்ட சகலமும் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. மேலும் ஏராளமான பக்தர்களை தாண்டி சென்ற அம்மன் வேடமணிந்த பக்தர்கள், சுடுகாட்டில் சூறையாடி விரதத்தை முடித்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து அம்மனை வழிபட்டனர்.
பெரியாண்டிச்சி அம்மன்
ஏற்காடு, ஜெரீனாக்காடு பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அருகே உள்ள சுடுகாட்டில் மயான கொள்ளை நடந்தது. முன்னதாக பெரியாண்டிச்சி, அங்காள அம்மனுக்கு பூஜை நடந்தது. மலர் அலங்காரத்தில் அங்காளம்மன், சத்தாபரண ஊர்வலம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட், முருகன் நகர் வழியே சென்ற ஊர்வலம், கோவிலை அடைந்தது. சத்தாபரணத்துக்கு முன், சிவன், பெரியாண்டிச்சி, கருப்பு, காட்டேரி போன்ற வேடம் அணிந்த பக்தர்கள், உயிருள்ள கோழிகளை வாயில் கடித்து குதறியபடி சுடுகாடு நோக்கி ஆக்ரோஷமாக சென்றனர். பின் சுடுகாட்டில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம்
செய்தனர்.

